காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில் முன்னர் அஷ்ரப் கனி அரசுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை தாலிபான் படையினர் தன்வசப்படுத்தி இருக்கின்றனர். ஆப்கானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் விலக தொடங்கியதும் அதிரடி நடவடிக்கைகள் மூலம் தாலிபான்கள் மாகாண தலைநகரங்களை கைப்பற்றினர். ஆகஸ்ட் 15ம் தேதி அரசு படைகளுடன் மோதிய தாலிபான்கள், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். முன்னதாக அதிபர் அஷ்ரப் கனி குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.
ஆகஸ்ட் 30ம் தேதி படைகள் அனைத்தையும் விலக்கி கொண்ட அமெரிக்கா ராணுவம், ஏராளமான விமானங்கள், ஆயுதங்கள், நவீன கருவிகளை காபூல், கந்தஹார் உள்ளிட்ட இடங்களில் விட்டு சென்றுள்ளது. இந்நிலையில் கந்தஹாரில் அமெரிக்கா விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான ANA -ஹம்வீ வகை ராணுவ வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்காவின் கைப்பற்றப்பட்ட ராணுவ வாகனங்களை கொண்டு கந்தஹாரில் தாலிபான்கள் அணிவகுப்பு ஒன்றியும் நடத்தி உள்ளனர்.
இதனிடையே காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமான போக்குவரத்தை சீரமைக்க தாலிபான்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக கத்தார் அரசின் உதவியை அவர்கள் நாடி உள்ளனர். தாலிபான்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கத்தார் அரசு, விமான போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப குழு ஒன்றை தனி விமானம் மூலம் காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளது.