சென்னை : 3ம் பாலினத்தவர் மற்றும் ஓரினசேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள் நட்புடன் பழகி உள்ளனர்.பின்னர் அது காதலாக மாறியதால் இருவரும் பிரிய மனம் இலலாமல் மதுரையில் இருந்து சென்னை தொண்டு நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 3ம் பாலினத்தவர் மற்றும் ஓரின சேர்க்கையாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர்களை கையாள காவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி,3ம் பாலினத்தவரை காவல்துறையினர் துன்புறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய விதிகளை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் அவர்கள் சமுதாயத்தில் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கும் நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.