×

பழநி மலைக்கோயில் ரோப்கார் இரும்பு கயிறு மாற்றும் பணிகள் தீவிரம்

பழநி : பழநி மலைக்கோயில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணியில் இரும்பு கயிறு மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்களும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகிறது. இந்த ரோப்காரில் தற்போது வருடாந்திர பராமரிப்பாக நவீன முறையிலான புதிய ரோப்கார் பெட்டி, ஷாப்ட் பொருத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல் ரோப்காரில் 3 வருடத்திற்கு ஒருமுறை இரும்பு கயிறு மாற்றப்படுவது வழக்கம். இதன்படி நேற்று ரோப்காரில் இரும்பு கயிறு மாற்றும் பணி துவங்கியது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் 850 மீட்டருக்கு இரும்பு கயிறு கொண்டு வரப்பட்டது. ரோப்காரில் இரும்பு கயிறு பொருத்தப்பட்டு, புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்படும். வல்லுநர் குழு ஒப்புதலுக்குப்பின் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Malny Temple , Palani, Rope car, Murugan Temple
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு