சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நேற்று காலை கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காலி பால் டேங்கர் லாரி புறப்பட்டது. லாரி ஆசனூர் அருகே திம்பம் மலைப்பாதை சீவக்காய்பள்ளத்தில் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு திருப்பத்தில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் இருந்த 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.
விபத்து குறித்து அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். லாரி டிரைவரை மீட்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவரை போலீசார் சிகிச்கைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் இயந்திரம் மூலம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.