×

இல்லத்துணையைப் பிரிந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்!!

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் .

இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தியில்,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள், மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.இல்லத்துணையைப் பிரிந்து வாடும் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,எனத் தெரிவித்துள்ளார்.
                                            
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் உயிர் இழந்த துயரச் செய்தி கேட்டு வருந்துகிறேன்.நான்கு திங்களுக்கு முன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய சகோதரர் பாலமுருகன் அவர்கள் மறைந்தார்.இடிமேல் இடி விழுந்ததைப் போல, தன் துணைவியாரையும் இழந்து தவிக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்,எனத் தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு. வெங்கடேசன், “சக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் அவர்களின் தாயாரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியுமான விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, “தமிழக முன்னாள் முதலமைச்சரும்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார் .

எம்.பி. ஜோதிமணி, “அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவியும்,நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரவீந்திரநாத்குமார் அவர்கள் தாயாருமான விஜயலட்சுமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Tamilisai ,O. Panneer Selvam , மனைவி விஜயலட்சுமி
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...