சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் (திமுக) பேசியதாவது: பெரம்பூர் தொகுதியில் அரசு தொழில் கல்லூரி (ஐடிஐ) அமைத்து தர வேண்டும். சின்னாண்டி மடம், சஞ்சய் நகர், எருக்கஞ்சேரி, எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடசென்னை மாணவர்களும் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் ஒரு நூலகத்தை பெரம்பூர் தொகுதியில் அமைத்து தர வேண்டும்.
பெரம்பூர் தொகுதியில் அன்றைய துணை முதல்வர், இன்றைய முதல்வர் 26.2.2009 அன்று பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திராகாந்தி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 3,200 குடும்பங்களுக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். அதில் 360 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் விடுபட்டது. எனவே, விடுபட்ட 360 குடும்பங்களுக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும். பட்டா தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீது வருவாய் ஆய்வாளர்கள், துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.