திண்டுக்கல் : தாடிக்கொம்பு அருகே, குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சியில் உள்ள உலகம்பட்டியிலிருந்து அச்சாம்பட்டி கிராமத்துக்கு செல்ல சுமார் 5 கி.மீ தூரத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் விளையும் காய்கறிகளை திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் தாடிக்கொம்பு சந்தைகளுக்கு கொண்டு செல்ல இந்த தார்ச்சாலையை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
மேலும் வியாபாரிகள், மில்வேலை தொழிலாளர்கள் இந்த சாலை வழியாக செல்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வாகனங்களும் சென்று வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சியில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. டூவீலர்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். மழை காலங்களில் தண்ணீர் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பாதாசாரிகள், பொதுமக்கள் கீழே விழுகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க அகரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.