×

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல், திருமண மண்டபம், விருந்து அரங்கங்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் விருந்து அரங்கங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி திரவம் வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது கலந்து கொள்பவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் அமருவதையும், உணவு உண்ணும் நேரங்களில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் இருக்கைகள் அதிக இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளதையும் மண்டப உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். உணவகங்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 50 சதவிகித இருக்கைகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு ரூ.200 அபராதமும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களுக்கு அபராதமும், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டால் உணவக உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Chennai Corporation , Corona, instructions, hotel, wedding hall,, fine
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...