திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலமருதூர் கிராமத்தில் விவசாயி பொன்முடி என்பவர் 10 ஆண்டுகளாக ராசயன உரம் இல்லாமல் சாகுபடி செய்து வருகிறார். கடந்த மூன்று வருடகளாக பாரம்பரிய நெல் ரகமான கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயி பொன்முடி கடந்த ஆண்டு இரண்டு மா நிலத்தில் மாப்பிள்ளை சம்பாவும், இயற்கை முறையில் கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக ஒரு குழி ஒரு நெல் ரகம் வீதம் 34 வகையான பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்தார்.
கடந்த ஆண்டு இந்த வயலில் மாப்பிள்ளை சம்பா நேரடி விதைப்பு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதிஅறுவடை செய்தார். இரண்டு மாவிற்கு 8 நெல் மூட்டை கிடைத்தது. அதன்பிறகு நான்கு முறை உழவு செய்தும் தற்போது அறுவடை செய்த நிலத்தில் அவ்வப்போது பெய்த மழையினால் மீண்டும் அறுவடை செய்த வயலில் மாப்பிள்ளை சம்பா தூர்விட்டு முளைத்து செழித்து வளர்ந்து மீண்டும் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இதுகுறித்து இயற்கை விவசாயி பொன்முடி கூறியது:கடந்த மூன்று ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்து வருகிறேன். கடந்த ஆண்டு வயலில் இரண்டு மா நிலத்தில் மாப்பிள்ளை சம்பா நேரடி விதைப்பு சாகுபடி செய்தேன். கடந்த பிப்ரவரி மாதம் அறுவடை செய்தேன். இந்த ஆண்டு சாகுபடி செய்வதற்காக சென்று பார்த்தபோது மழையினால் மீண்டும் பயிர்கள் முளைத்து செழித்து வளர்ந்துள்ளது.
அதனால் அந்த பயிருக்கு இயற்கை உரமிட்டு இரண்டாவது போகமாக இன்னும் ஐந்து மாதங்களில் அறுவடை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.இந்த பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா அரிசி பார்க்க சிவப்பு நிறத்தில் இருக்கும்இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து இருக்கிறது. அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது.மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும், உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு.இந்த அரிசியை நீங்கள் உங்கள் உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.