* தினமும் குடிமகன்கள் வாக்குவாதம்
* மாவட்ட மேலாளரிடம் ஊழியர்கள் புகார்
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 228 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு ரூ.3 முதல் ரூ.5 கோடி வரை மதுவிற்பனை நடந்துவருகின்றன. இதனிடையே, 228 கடைகளுக்கும் விழுப்புரத்தில்உள்ள தமிழ்நாடுநுகர்பொருள் கிடங்கிலிருந்து, அனைத்துக்கடைகளுக்கும் சரக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள கடைகளுக்கு கடந்த சில மாதங்களாக சரக்கு சப்ளை சரிவர நடக்காததால், கடைக்கு வரும் குடிமகன்கள் விரும்பிய பிராண்டு இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதாகவும், பலர் ஆத்திரத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கடைமேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், டாஸ்டாக் மாவட்ட மேலாளரிடம் புகார் மனுவினை அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், லோடுமேன்கள் 60 பேர் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பணியில் பாதி பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள், மதுஆலையிலிருந்து வரும் சரக்குகளை இறக்கி வைக்க வேண்டும். மேலும், கடைகளுக்கும் வாகனங்களில் ஏற்றி வைக்கவேண்டும்.
லோடுமேன்கள் பற்றாக்குறையாக இருப்பதால், எங்கள் பகுதியில் உள்ள கடைகளுக்கு சரக்கு வந்து சேரவில்லை. பொதுவாக, திங்கள், புதன், வெள்ளியில் பில்போடப்பட்டு மறுநாள்வந்து விடும். ஆனால், தற்போது 2 நாட்கள் சரக்குவருவதே பெரும்சிரமமாக உள்ளது. லோடுமேன் சங்க நிர்வாகிகளும் கூடுதல் ஆட்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாவட்டத்தை பிரித்தாலும், டாஸ்மாக் நிர்வாக ரீதியாக பிரிக்கப்படவில்லை. லோடுமேன்கள் பற்றாக்குறையால், கடைகளுக்கு சரிவர சரக்குகள் சப்ளை செய்யவில்லை.
இதனால், குடிமகன்களுடன் தினமும் மல்லுகட்டவேண்டிய நிலைஉள்ளது. குறிப்பாக, எங்கள்பகுதியில் ஏழை, நடுத்தரவர்க்க குடிமகன்கள் வருகின்றனர். அவர்கள் விரும்பிய குறைந்த விலையில் உள்ள பிராண்டகள் கிடைக்காததால் எங்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். காவல்நிலையம் வரை பிரச்னைகள் செல்கிறது. இதுகுறித்து, மாவட்ட மேலாளரிடம் புகார்அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தனர்.
விற்பனை குறைவால் போலீசார் விசாரணை
டாஸ்மாக் கடைகளின் மது விற்பனையை, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும் கண்காணித்துவருகின்றனர். இதனிடையே, சரக்கு சப்ளைசெய்யாததால் வழக்கத்தைவிட மதுவிற்பனை குறைந்துவிடுகிறது. இதனால், போலீசார் நேரில்சென்று விசாரணை நடத்துகின்றனர். கள்ளச்சந்தையில் மது விற்கப்படுகிறதா? சாராயம் விற்பனை நடைபெறுகிறதா? என்ற கேள்வியையும் முன்வைத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்துவதால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட மேலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.