டெல்லி : உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மூத்த நீதிபதியான திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷி இடம் பெறாதது நீதித்துறையின் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு எதிரான தீர்ப்புகளை வழங்கியதாலேயே குரேஷி பழிவாங்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைப்படி 2 ஆண்டுகளுக்கு பின் அண்மையில் 9 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இந்த பட்டியலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மூத்தவரான ஏ.எஸ்.ஒகா பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அகில் குரேஷியின் பெயர் இடம் பெறவில்லை.
ஆனால் அவரை விட பணி மூப்பு குறைந்த நீதிபதிகள் நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ள போதும் குரேஷிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது நீதித்துறையினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குரேஷி பெயர் விடுபட்டதற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், கடந்த காலங்களில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக அவர் அளித்த தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மூத்த வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். சீனியாரிட்டி, நேர்மை, திறமை என அனைத்து தகுதிகளும் குரேஷிக்கு இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் காலி பணியிடம் ஒன்று உள்ள போதும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கவலை அளிப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
யார் இந்த அகில் குரேஷி ?
*திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அகில் குரேஷி பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர்.
*2010ம் ஆண்டு சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
*2012ம் ஆண்டு குஜராத் முதல்வர் இருந்த மோடி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் லோக் ஆயுக்தா தலைவர் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தவர். இதே போல குஜராத் அரசு பின்னடைவாககருதப்படும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியவர் இவர் ஆவார்.