×

உர வழங்கல் திட்டத்தின் படி தமிழகத்துக்கு யூரியா, டிஏபி உரங்களை வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை:  ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை  அமைச்சருக்கு, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில்  கூறியிருப்பதாவது: தமிழகத்தில், நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு  நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் காட்டிலும்  அதிகமாக 4.90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. மேலும்,  தென்தமிழகத்தில் பாசனத்திற்காக தண்ணீர்  திறக்கப்பட்டதன் காரணமாக மாநிலத்தில் கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில்  நிகழாண்டில் நெல் பயிரில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேலாக சாகுபடி  செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டைக் காட்டிலும் 2.72லட்சம் ஏக்கரில் கூடுதலாக  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 25.40  லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக,  யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு  நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை யூரியா உரம் 3.838 லட்சம் மெட்ரிக் டன்  ஒதுக்கீடு ஒன்றிய அரசு செய்துள்ளது. இருந்த போதிலும், யூரியா 2.56 லட்சம்  மெட்ரிக் டன் மட்டுமே உர நிறுவனங்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. உரம் வழங்கியதில் 1.278 லட்சம் மெட்ரிக் டன் குறைவு காணப்பட்டது. மேலும்  இதே மாதங்களில் டிஏபி உரம் 1.20 லட்சம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு  செய்யப்பட்டதில் 87,000 மெட்ரிக் டன் மட்டுமே தமிழ்நாட்டிற்கு  வழங்கப்பட்டுள்ளது. டிஏபி உரம் வழங்குதலில் 33,000 மெட்ரிக் டன் குறைவு  நிலவியது. தமிழ்நாட்டில் 26.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி  செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் அடி உரம் மற்றும் மேலுரமிட யூரியா  மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

எனவே, உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை  உர வழங்கல் திட்டத்தின் படி, முழுமையாக வழங்கவும், மற்றும் இறக்குமதி  செய்யப்படும் உரங்களை தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களிலும் மற்றும்  புதுச்சேரி மாநிலத்திலுள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து  தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Fertilizer Distribution Scheme ,DAP ,Tamil Nadu ,MRK ,Panneerselvam ,Union Minister , Tamil Nadu
× RELATED அதிக விளைச்சல் பெற்றிட பயறு வகைகளில்...