×

தர்மபுரி அருகே திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டு முன் விஷம் குடித்து பெண் இன்ஜினியர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

தர்மபுரி: தர்மபுரி அருகே காதலித்து விட்டு, திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு, விஷம் குடித்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை ராஜகொல்லஅள்ளியை சேர்ந்தவர் காவேரியப்பன். இவருடைய மகள் ஞானமொழி (29), பி.டெக் படித்து பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கால், தற்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தார். இவரது உறவினரான குட்டூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் முரளிதரன்(33), பிஇ படித்து விட்டு, ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், ஞானமொழியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், முரளிதரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு முரளிதரனும் ஒப்புக் கொண்டார். இதையறிந்த ஞானமொழி, குட்டூரில் உள்ள காதலன் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று கேட்டுள்ளார். அங்கு காதலன் வீட்டார் அவருக்கு சரியான பதில் அளிக்காததால், விரக்தி அடைந்த அவர், முரளிதரன் வீட்டின் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலின்படி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, நேற்று மதியம் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், ஞானமொழி சாவுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதியமான்கோட்டை போலீசார், அவர்களிடம் புகாரை மனுவாக கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து சடலத்தை பெற வைத்தனர். காதலன் தந்தை கைது: இதை தொடர்ந்து, இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக முரளிதரன், அவரது பெற்றோர் தங்கவேல் (56), ராதா (50) ஆகியோர் மீது வழக்கு பதிந்த போலீசார், தங்கவேலை நேற்று மாலை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : Dharmapuri ,Dharna , Dharmapuri, woman, suicide
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி