×

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டை மேம்படுத்தும் பணியை கிடப்பில் ேபாட்ட அதிமுக அரசு: 4 ஆண்டுக்கு பிறகு பாம்பு கடி மருந்து தயாரிக்கும் ஆய்வு விரைவில் தொடக்கம்: தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் நடவடிக்கை

திருச்சி: சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1899ல் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சின்னம்மை, காலரா, டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பெருந்தொற்றுகள் தொடர்பான ஆய்வுகளில் இந்த ஆய்வகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக பன்றிக்காய்ச்சல் பாதிப்பின் போது இந்த ஆய்வகத்தில் 50 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பிசிஜி தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்த ஆய்வகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.  இந்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் தமிழ்நாட்டில் முதல் கொரோனா ஆய்வகம் கிண்டியில்தான் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான சோதனை செய்யப்பட்டது.

மேலும் இந்த மைய வளாகத்தில் தமிழக அரசின் சிறப்பு கொரோனா வார்டு செயல்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்சென்னையில் 250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்த மருத்துவமனை சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்கிடையில் பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் பணியை தொடங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான பூர்வாங்க ஆய்வு பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் 2016 - 2017ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின் போது அளிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுதுறை கொள்கை விளக்க குறிப்பில் கிண்டி கிங் நோய்த் தடுப்பு மருந்து நிலையம் மேம்பாடு தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில், ‘‘கிண்டி கிங் நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் தடுப்பு ஊசி மருந்து தயாரித்தலை மீண்டும் தொடங்கவும், திசு வங்கி ஏற்படுத்திடவும், பழைய கட்டடத்தில் பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிக்க ஏதுவாக கட்டிடத்தினை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காகவும், குளிர்சாதன வசதி ஏற்படுத்திடவும் 16.72 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு பிறகு கடந்த அதிமுக அரசு எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பு கடிக்கான நஞ்சு முறிவு மருந்து தயாரிப்பதற்கான ஆய்வு, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை மருத்துவ பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது.

Tags : AIADMK government ,Kindi King Institute ,Tamil Nadu Medical Services Corporation , Tamil Nadu Medical Services Corporation
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...