×

காரைக்குடியில் 1.83 கோடியில் நினைவுப்பரிசு விற்பனையகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: காரைக்குடியில் 1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நினைவுப்பரிசு விற்பனையகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சி குழுமத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டத்தின் வாயிலாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நினைவுப்பரிசு விற்பனையகத்தை திறந்து வைத்தார்.

இந்த விற்பனையகம் 5,500 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. விருதுநகர் கைத்தறி குழுமம் அமைந்துள்ள சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற முக்கிய ரகங்களான அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், பரமக்குடி சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், திருபுவனம் மற்றும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இதர ரகங்களும் இந்த விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படும்.

இதில் தமிழகத்திலுள்ள 68 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கு பெறும். மேலும், இந்த விற்பனையகத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான கைத்தறி துணி ரகங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில்,  கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : CM. Q. Stalin , Karaikudi, Chief Minister MK Stalin
× RELATED வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி,...