வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த வட்டு எறிதல் (எப்-52 பிரிவு ) போட்டியில் வினோத் (41 வயது) 19.91 மீட்டர் தொலைவுக்கு வீசி வெண்கலம் வென்றார். இது ஆசிய சாதனையாகவும் அமைந்தது. இந்நிலையில் வினோத் வெற்றி நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று காலை தகவல் வெளியானது. போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்ததை அடுத்து, அவரது உடல் தகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழு, வினோத் இந்த பிரிவில் பங்கேற்க தகுதியற்றவர் என அறிவித்தது.
அதாவது எப்- 2 பிரிவில் பலவீனமான தசை ஆற்றல், தடைசெய்யப்பட்ட இயக்கம், மூட்டு குறைபாடு அல்லது கால் நீள வேறுபாடு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அதற்கு மாறாக வினோத் கூடுதல் உடல் திறன் பெற்றிருப்பதாக தொழில்நுட்பக் குழு கண்டறிந்தது. அதனடிப்படையில் தான் வெண்கலத்தை திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து 19.51 மீட்டர் தொலைவுக்கு வட்டு வீசி 4 வது இடம் பிடித்த லாத்வியா வீரர் அய்கார்ஸ் அபினிசுக்கு வெண்கலம் வழங்கப்படும். போட்டிக்கு முன்பாக நடந்த உடல்தகுதி சோதனையில் நிர்வாகிகள் அலட்சியமாக இருந்ததன் விளைவாக, வினோத் பதக்கத்தை இழக்க வேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது.