ராசிபுரம்: வேலை வாங்கித் தருவதாக கூறி 76.50 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவரது உறவினரே புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில், புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில், ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் மதிவேந்தனிடம் தோல்வியடைந்தார். அமைச்சராக இருந்த போதே, டாக்டர் சரோஜா மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், அவரது உறவினரான கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற குணசீலன் (64) என்பவர், வேலை வாங்கித் தருவதாக கூறி டாக்டர் சரோஜா 76.50 லட்சம் மோசடி செய்து விட்டதாக ராசிபுரம் காவல்நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். குணசீலன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பத்திர எழுத்தராக உள்ளேன். அமைச்சராக இருந்தபோது, டாக்டர் சரோஜா எங்களை அழைத்து, சத்துணவு திட்டத்தில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், பணம் கொடுப்பவர்களை வேலையில் சேர்த்து விடுவதாகவும் கூறினார். இதனை நம்பி நானும், எனது மனைவியும் 15 பேரிடம் 76.50 லட்சம் வசூலித்தோம். முதல் தவணையாக 50 லட்சத்தை எனது வீட்டில் வைத்து, அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன்.
Tags : Former minister ,Saroja , Former Minister Saroja, fraud