சென்னை: கோயில்களில் வீடு, கடைகளுக்கு வாடகை செலுத்தும் வசதி நாளைமறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் கோயில்களின் வருவாய், வாடகை பாக்கி விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் தொடர்பாக அந்தந்த அறநிலையங்களில் பேணப்படும் கேட்பு, வசூல், நிலுவை பதிவேட்டின் விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், அறநிறுவனங்களில் குத்தகைதாரர், வாடகைதாரர்களால் செலுத்தப்படும் குத்தகை, வாடகை தொகைக்கு அச்சடித்த ரசீது வழங்கும் முறையினை ரத்து செய்து வரும் 1ம் தேதி (நாளைமறுநாள்) முதல் இணையதள வழியில் அந்தந்த அறநிறுவனங்களின் நிர்வாகத்திற்கு குத்தகை, வாடகையினை செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிலையில், அனைத்து அறநிறுவனங்களுக்கும் சொந்தமான அசையா சொத்துக்களின் கேட்பு, வசூல், நிலுவை தொடர்பாக விவரங்களை விடுதல் இல்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்தந்த அறநிறுவனங்களில் அறங்காவலர், ஆய்வர், செயல் அலுவலர் ஆகியோர் கேட்பு, வசூல், நிலுவை தொடர்பாக கணினியில் பதிவேற்றம் செய்த விவரத்திற்கு சான்றினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டும், பட்டியலை சேர்ந்த கோயில்களுக்கு இணை ஆணையரும், பட்டியலை சேராத கோயில்களுக்கு உதவி ஆணையரும் கையொப்பமிட்டு இன்றைக்குள் அனுப்பி வேண்டும். சான்று அளிக்க தவறும் பட்சத்தில் உரிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.