பெங்களூரு: மைசூரு சாமுண்டி மலையில் வட மாநில மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் 6 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மைசூரு சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை வட மாநில பட்டதாரி மாணவி ஒருவர் தனது நண்பருடன் பைக்கில் சென்றார். அவர்களை வழிமறித்த கும்பல், ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பியது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. போலீசார் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் கூறியதாவது: பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களின் இருப்பிடம் தமிழக மாநிலம், திருப்பூர் மற்றும் மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் பதிவாகி இருந்தது. இதை ஆய்வு செய்த போலீசார் மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டதுடன் அவர்களை கைது செய்வதில் வெற்றி அடைந்தனர். மாணவிக்கு நடந்த பலாத்கார சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் நடந்த போது இவர்களின் செல்போன் ஒரே இடத்தில் இருந்துள்ளது. கைதான ஐந்து பேரில் சிலர் மீது தமிழ்நாட்டில் வேறு வழக்குகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது குறித்த தமிழக போலீசாருடன் பேசி வருகிறோம். 6 பேரில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சிக்கியது எப்படி?
மாணவி பலாத்கார வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவன் கார் டிரைவர், மற்றவர்கள் கார்பென்டர், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட வேலைகளை செய்யும் நபர்கள். இவர்கள் அனைவரும் மைசூருவுக்கு வந்து காய்கறி விற்பனை செய்வது வழக்கம். தங்களின் வேலை முடிந்த பிறகு சாமுண்டீஸ்வரி மலை அடிவாரத்தில் மதுபானம் குடித்துவிட்டு சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பி விடுவர். மைசூருவில் தனியாக யாராக மாட்டினால் அவர்களிடம் பணத்தை பறித்து விட்டு தப்பி விடுவார்கள். இவர்களின் செல்போன் அலைக்கற்றையை வைத்து சாம்ராஜ் நகர் எல்லையில் உள்ள தாளவாடியில் இருவரையும், திருப்பூரில் 3 பேரையும் கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.