பழநி: பழநி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்தாண்டு போதிய மழை பெய்ததால் பழநி பகுதியில் நெற்பயிர் சாகுபடி 2 போகங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பழநி பகுதியில் ராமநாதநகர், மயிலாடும்பாறை, பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சில விவசாய நிலங்களில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை காலத்தை நெருங்கி காத்திருக்கின்றன.
இந்நிலையில் பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இத்திடீர் மழையால் அறுவடை காத்திருக்கும் நெற்பயிர் நீரில் மூழ்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாட்கள் மழை பெய்தால் மறுமுளைப்பு ஏற்பட்டு விடும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.