×

கடலூர் அருகே விபத்து: லாரி மீது கார் மோதி கணவன், மனைவி பலி

திட்டக்குடி: கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில், சென்னையை சேர்ந்த தம்பதி இறந்தனர். குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜவகர். இவர் தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தேனி மாவட்டம் செல்வதற்கு சென்னையிலிருந்து தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். காரை ஜவகர் ஓட்டி வந்துள்ளார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லக்கூர் கைகாட்டி அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே ஜவகர் (60) மற்றும் அவருடைய மனைவி ஜாஸ்மின் (55) ஆகிய இருவரும் இறந்தனர். காரில் பயணம் செய்த ஜவகர் மகள் ஜெனி (24), மருமகன் ஐவன்வினித் (27), அவர்களுடைய 4 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலின் பேரில்  விரைந்து வந்த ராமநத்தம் போலீசார் பலத்த காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்த இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Cadalur , Accident: Larry, car, husband, wife
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை