ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் ஆள் இல்லாத வீட்டின் சுவர் மீது ஏறிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியில் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அந்த வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வீட்டை சுற்றி பொதுமக்கள் சூழ்ந்து அவனை மாடியிலிருந்து கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அந்த நபர் ஒரு மணி நேரமாக கீழே இறங்கி வராமல் வீட்டின் சுவர் மீது அமர்ந்தே இருந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாடி வீட்டின் சுவர் மீது அமர்ந்திருந்த மர்ம நபரை கீழே இறங்குமாறு கூறினர். அதன் பிறகு வீட்டின் சுவர் மீது இருந்து கீழே இறங்கி வெளியே வந்த மர்ம நபரை பொதுமக்கள் சரமாரி தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அந்த நபர் போதையில் செய்வதறியாமல் தள்ளாடியபடி நின்றார். பின்னர் அந்த மர்ம நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் ரமேஷ் என்பது தெரியவந்தது.இவர் கொத்தனார் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அந்த போதை ஆசாமியை காவல் நிலையம் அழைத்து சென்று வீடு புகுந்து திருட வந்தாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மாடி வீட்டின் சுவர் மீது ஏறி நபரால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
தனிப்படை போலீசாரும் விசாரணை
ஜோலார்பேட்டை பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் 5 வீடுகளுக்கும் மேல் அடுத்தடுத்து வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்னும் வழிப்பறி மற்றும் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டப்பகலில் சின்ன மூக்கனூர் பகுதியில் ஆளில்லாத மாடி வீட்டின் சுவர் மீது ஏறிய ரமேஷ் என்பவரை போலீசார் பிடித்து இவர் வீட்டில் கொள்ளையடிக்க சென்றாரா? என்பது குறித்தும் இதற்கு முன்பு நடந்த வீடுகளில் திருட்டு சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.