இலுப்பூர் : அன்னவாசல் அருகே விவாயிகளுக்கு தானியங்கள் சேமித்து பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைஅட்மா-மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் தானியங்கள் சேமித்து பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி அன்னவாசல் அருகேஉள்ள பனம்பட்டியில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் பழனியப்பா தலைமை வகித்தார். ரோஸ் பசுமைகுடில் இயக்குநர் ஆதப்பன் கலந்து கொண்டு தானியங்கள் சேமித்துபாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார்.
தானியங்களை தரையிலிருந்து சற்றுஉயர்த்தி வைத்தால் கரையான் மற்றும் கசிவுநீரிலிருந்து பாதுகாக்கலாம், நல்லதரமான விதைகளை சரியான அளவு ஈரப்பதம் கொண்டு சேமிக்க வேண்டும், எலிகளிடமிருந்து தானியங்களை பாதுகாக்கும் அளவிற்கு கட்டிடவசதிகளை மேம்படுத்த வேண்டும், சரியான கால இடைவெளிகளில் பூச்சிகள் அண்டவிடாமல் கண்காணிக்க வேண்டும், தானியங்களை சிறியஅளவில் சேமிக்க இயற்கை பூச்சி விரட்டிகள் கொண்டும், பெரியஅளவில் சேமிப்பதற்கான சைலோ போன்ற தொழில்நுட்பகொள் கலன்களை பயன்படுத்தலாம் என்று கூறினார். இதில் விராலிமலை, திருமயம் மற்றும் பொன்னமராவதி வட்டாரத்தின் விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவிதொழில்நுட்ப மேலாளர் தேவி நன்றி கூறினார்.