திருவள்ளூர்: பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை, வரத்து நீர் ஆகியவற்றால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடியாகும். இதன் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை நீருடன், கிருஷ்ணா கால்வாய் மூலம் 866 கன அடி நீர் வரத்தும் உள்ளது. அதன் அடிப்படையில் நேற்று நிலவரப்படி 2,337 மில்லியன் கன அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் கால்வாயில் 557 கன அடி நீரும், சென்னை குடிநீருக்காக பேபி கால்வாயில் 9 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூண்டி ஏரியை சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தற்போதைய நிலையில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்துள்ளது. ஆந்திர மாநிலம் அம்மன்பள்ளி அணையில் இருந்து பள்ளிப்பட்டு அருகே நகரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கான நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே உபரி நீரை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பி தேக்கி வைக்க இடம் உள்ளதா அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவின் செயல்பாடு சரியாக உள்ளதா, மதகு மோட்டார்கள் மற்றும் மதகுகளில் நீர்க் கசிவுகளையும் பார்வையிட்டார்.