புதுக்கோட்டை : புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் நிஜாம் காலனி பகுதியை சேர்ந்த ராஜ்முகம்மது என்பவர் எண்ணெய் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் அருகே குறுகலான சந்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வைத்துள்ளார்.இந்நிலையில் அந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சந்து பகுதி என்பதால் தீயை அணைப்பதில் வீரர்கள் கடும் சிரமப்பட்டனர். இதனையடுத்து பழைய நகராட்சி கட்டிடத்தின் வழியே மேலே ஏறிய தீயணைப்பு வீரர்கள் எண்ணெய் கிடங்கின் மேற்கூரையை துளையிட்டு, அதன் வழியே தண்ணீரை பீச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எண்ணை குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து புதுக்கோட்டை நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.