×

கோடியக்கரை சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேச ஆலா பறவைகள் முதன் முறையாக வருகை

*சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வேதாரண்யம் : கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேச ஆலா பறவைகள் முதன்முதலாக வரத்துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

தற்போது மழைக்கால துவக்கத்தை அறிவிக்கும் விதமாக வேதாரண்யம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து முதன்முதலாக ஆலா பறவைகள் வந்துள்ளது. வெளிநாட்டு பறவைகள் வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்திற்கு அதிகம் வருகையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறுகையில், ரஷ்யா நாட்டிலிருந்து கூழைகிடா, இலங்கையிலிருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், அண்டார்டிக்காவில் இருந்து கடல்காகம் என 18 வகையான ஆலா பறவைகள் தற்போது வந்துள்ளது. இப்பறவைகள் வந்து 3 முதல் 4 வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும்.

அதன் பிறகு இந்த சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து 247 வகையான பறவைகள் வந்து தங்கி செல்லும். இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காணலாம். கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றது. இந்த ஆண்டு பருவநிலை நன்றாக உள்ளதால் 5 லட்சம் பறவைகள் வந்து தங்கி செல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது என்றார்.

Tags : Divisional ,Gödikar Sanctuary , Vedaranyam, Kodiyakarai, Birds Sanctuary
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்