சென்னை: ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்ஐசி ஏஜென்ட்கள் வாடிக்கையாளர்களின் பாலிசி விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்ய ஆனந்தா என்ற மொபைல் ஆப்சை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆனந்தா மொபைல் ஆப்ஸ் மூலம், வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆதார் எண் அடிப்படையில் உறுதி செய்யலாம். காகித விண்ணப்பங்கள் இன்றி, மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். இது முகவர்களின் பணியை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க உதவுவதோடு, அதிக வாடிக்கையாளர்ளை ஈர்க்கவும் வழி வகுக்கிறது. புதிய ஆப்சை எல்ஐசி இந்தியாவின் தலைவர் எம்.ஆர்.குமார், வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘ஆனந்தா இணையதளத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முகவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், எல்ஐசி நிர்வாக இயக்குநர்கள் முகேஷ்குமார் குப்தா, ராஜ் குமார், சித்தார்தா மொஹந்தி, மினி இபே உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த செயலியை பயன்படுத்தும் முறைகள், அதன் சிறப்புகள் விளக்கப்பட்டது.