நியூயார்க்: யு எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்பே வீரர்கள், வீராங்கனைகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் கொரோனா தொற்று காரணமாக விலகியுள்ளார். முக்கிய கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன், ஆக. 30ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா(ஜப்பான்), நெம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா) என முன்னணி வீராங்கனைகள் தொடரில் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில் சிமோனா ஹாலேப்(ருமேனியா), 6 முறை யுஎஸ் ஓபன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக யுஎஸ் ஓபன் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
செரீனாவை தொடர்ந்து அவரது சகோதரியும் முன்னாள் சாம்பியனுமான வீனஸ் வில்லியம்சும் விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி வீராங்கனைகள் காயம் காரணமாக விலகி வரும் நிலையில் உலகின் 5ம் நிலை வீராங்கனை சோபியா கெனினும் போட்டியில் இருந்து விலகினார். காரணம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் .
அதேபோல் முன்னாள் யுஎஸ் சாம்பியன்களுமான ரபேல் நடால்(ஸ்பெயின்), ரோஜர் பெடரர், ஸ்டேன் வாவ்ரிங்கா(சுவிட்சர்லாந்து) ஆகியோரும் காயம் காரணமாக விலகி விட்டனர். கூடவே நடப்பு சாம்பியனும், ஆஸ்திரிய வீரருமான டொமினிக் தீமும் விலகி விட்டார். கனடா வீரர் மிலோஸ் ரானிக் விலகல் பட்டியலில் இணைந்துள்ளார்.