கொல்கத்தா: ஆசியாவின் பழமையான கால்பந்து தொடரான 130வது துரந்த் கோப்பை போட்டி செப்.5ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. துரந்த் கால்பந்து போட்டி, முப்படைகள் பங்கேற்கும் நாட்டின் பழமையான கால்பந்து தொடராகும். இது ஆசியாவில் மட்டுமின்றி, உலகின் 3வது பழமையான கால்பந்து தொடராகும். கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக நடைபெறவில்லை. இப்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 130வது துரந்தோ கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போட்டி செப்.5ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
ஏ பிரிவில் விமானப்படை, பெங்களூர் யுனைடட் எப்சி, சிஆர்பிஎப், முகமதன் எஸ்சி, பி பிரிவில் ராணுவம்(பச்சை), எப்சி கோவா, ஜாம்ஷெட்பூர் எப்சி, சுதேவா டெல்லி எப்சி, சி பி ரிவில் பெங்களூர் எப்சி, டெல்லி எப்சி, கப்பற்படை, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, டி பிரிவில் அசாம் ரைபிள், ராணுவம்(சிவப்பு), கேரளா எப்சி, ஐதராபாத் எப்சி ஆகிய அணிகள் என 16 அணிகள் களம் காண உள்ளன.
செப்.5ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய விமானப் படை-முகமதன் எஸ்சி அணிகள் மோத உள்ளன. காலிறுதி ஆட்டங்கள் செப்.23,24, 25 தேதிகளிலும், அரையிறுதி ஆட்டங்கள் செப்.27, 29 தேதிகளிலும் நடக்கும். இறுதி ஆட்டம் அக்.3ம் தேதி நடைபெறும். கோப்பை வெல்லும் அணிக்கு 40லட்ச ரூபாயும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 20லட்ச ரூபாயும், அரையிறுதியில் விளையாடும் அணிகளுக்கு தலா 5 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.