×

திகாரில் தனி அலுவலகம் நடத்தி அராஜகம் யுனிடெக் இயக்குனர்கள் மும்பை சிறைக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: யுனிடெக் நிறுவன மேலாண் இயக்குனர்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோரை திகார் சிறையில் இருந்து மும்பை சிறைக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அளவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்துவரும் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சந்திரா, மேலாண் இயக்குனர்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா, இயக்குனர் மினோதி, கணக்காளர் சஞ்சய் கல்ரா, தொழில் பங்குதாரர் திவேஷ் வத்வா மீது நிதி மோசடி புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, யுனிடெக் தலைவர் ரமேஷ் சந்திரா, மேலாண் இயக்குனர்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா, இயக்குனர் மினோதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, ‘சிறையில் இருந்து பரோல் அல்லது ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ் சந்திரா, தனது மகன்கள் சஞ்சய், அஜய் ஆகியோரை சிறை விதிகளை மீறி பலமுறை சந்தித்தார். மேலும் இவர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் தனியாக அலுவலகம் வைத்து நடத்தி வந்தனர். சிறை அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் நிறுவனத்தின் சொத்துகளை விற்றனர்,’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் இருந்து சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோரை மும்பையில் உள்ள ஆர்தர் சிறைக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் தனிப்பட்ட விசாரணை நடத்தி, 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

Tags : Anarchy Unitech ,Mumbai ,Tihar ,Supreme Court , Tihar, Private Office, Unitech Director, Mumbai Jail
× RELATED என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி...