×

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னுதாரணமாக உள்ளார்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே கேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

மேகேதாட்டு அணையை எப்படியாவது கட்டியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நேற்று தில்லியில் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை,‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்தக் கூட்டத்தின் விவாதத்திற்கான பொருட்களில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் சேர்ப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் என்னிடம் உறுதியளித்தார்’’ என்று கூறினார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிப்பது சாத்தியமே இல்லை என்றும் சூழலில், இத்தகைய வாக்குறுதியை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்திருப்பது தவறு; அதை ஏற்கமுடியாது.

மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததில் இருந்தே, இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதுகுறித்து விவாதிப்பதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. 03.12.2018 அன்று நடைபெற்றக் கூட்டத்தில் இது குறித்து பிரச்சினை எழுப்ப கர்நாடக அரசின் பிரதிநிதிகள் முயன்ற நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மேகேதாட்டு குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. அதன்பின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேகேதாட்டு அணை குறித்து கர்நாடகம் விவாதிக்க முயல்வதும், தமிழகத்தின் எதிர்ப்பால் அது கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை சேர்ப்பது நிச்சயமாக கர்நாடகத்துக்கு ஆதரவான செயலாகும். இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகளில் மத்திய அரசோ, மத்திய அமைச்சரோ ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கடைமடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்தால் அதை மத்திய அரசு பரிசீலிக்காது; அதை கர்நாடகத்திற்கே திருப்பி அனுப்பிவிடும் என்பது தான் பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் அப்போதைய மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு 2015&ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் மையக்கரு ஆகும். அதுமட்டுமின்றி, சிவசமுத்திரம் திட்டத்திற்காக 2014&ஆம் ஆண்டு கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பி விட்டது என்றும் உமாபாரதி கூறியிருந்தார். அது தான் மிகவும் சரியான நடவடிக்கை.

அதே நடைமுறையை பின்பற்றி, தமிழகத்தின் இசைவு பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதுவும் மேகேதாட்டு அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதே தவறு என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், திருப்பி அனுப்புவது தான் சரியான செயலாக இருக்க முடியும். அதை விடுத்து முறைகேடான வழியில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மத்திய அரசே ஏற்பாடு செய்வது தமிழகத்திற்கு இழைக்கப் படும் துரோகம் ஆகும். மேகேதாட்டு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு சாதகமாக செயல்படக்கூடாது.

எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்திற்கான விவாதப் பொருளில் மேகேதாட்டு அணை விவகாரத்தை மத்திய அரசு சேர்க்கக்கூடாது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மேகேதாட்டு அணை விரிவான திட்ட அறிக்கையை கர்நாடத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

Tags : Union ,Water ,Resources ,Minister , Meghattu, Union Minister of State for Water Resources, Ramdas
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு