×

ஸ்மார்ட் கார்டுகள் எப்படி வகைப்படுத்தப்படுகிறது: சட்டசபையில் காங்.உறுப்பினர் ராஜேஷ்குமார் கேள்வி

சென்னை: சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசியதாவது: தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தில் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் ஸ்மார்ட் கார்டுகளில் 5 வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. இது எந்த அடிப்படையில் வகைப்படுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் கேட்கிறேன். பாவப்பட்டவர்களுக்கு எம்.பி.எச்.ஏ என்ற குறியீட்டில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இரண்டு ஆசிரியர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் பி.எச்எச் என்ற குறியீடு உள்ளது.

அவர்கள் அனைத்து பொருட்கள் வாங்குகின்றனர். எனவே உண்மையான ஆட்களை கண்டறிந்து மக்கள் பயன் அடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் சக்கரபாணி:இது சம்பந்தமான புகார்கள் வந்துள்ளது. எனவே விரிவான ஆய்வு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முறையானவர்களுக்கு அரசு வழங்கும் பொருட்கள் செல்ல வேண்டும். அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர் ராஜேஷ்குமார்:தமிழ்நாடு அரசு பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் புழுங்கல் அரிசி தரம் குறைந்ததாகவும், மக்கள் உண்பதற்கு இயலாத நிலையில் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

புழுங்கல் அரிசி ஆந்திரா மற்றும் தெலங்கானா, மாநிலங்களில் இருந்து பொது விநியோக திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தமிழக விவசாயிகளிடமிருந்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பின்னர் அரிசியாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் மொத்த அரிசியில் 9.5 சதவிகிதம் சேதாரம் என ஏற்றுக் கொள்ளப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், அரிசியின் தரம் குறைவதுடன், மொத்தமாக கொள்முதல் செய்யும் அரிசியில் 10ல் 1 பங்கு சேதாரமாவதால் அரசு பணம் வீணாகிறது. அரசின் கொள்முதல் விலை ஒரு குவிண்டால் அரிசி ரூபாய் 3726.26. ஒரு கிலோ அரிசி விலை ரூ.37.27.

இத்துடன் போக்குவரத்து கட்டணத்தை சேர்த்தால் ஒரு கிலோ அரிசி ரூபாய் 40-க்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 100 சதவிகித கொள்முதல் அரிசியில் 90 சதவிகிதம் மட்டுமே நல்ல அரிசியாகும். எனவே, அரசு கொள்முதல் செய்யும் அரிசியின் தரக் கட்டுப்பாட்டினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறேன். தமிழகத்தில், தரமான அரிசி பொதுச் சந்தையில் தாராளமாக கிடைக்கிற போது தரமற்ற அரிசியினை அண்டை மாநிலங்களில் இந்திய உணவு கழகம் மூலம் எதற்காக கொள்முதல் செய்ய வேண்டும்? இதை அரசு பரிசீலனை செய்து நல்ல முடிவினை எடுத்திட வேண்டுகிறேன். அமைச்சர் சக்கரபாணி: உறுப்பினர் தரமான அரிசி வழங்க வில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் 1 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அது தான் தற்போது வழங்கப்படுகிறது. தரமான அரிசி தரவில்லை என்று புகார் வந்துள்ளதால் கலர்சால்ட் பண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தரமான அரிசி வழங்கப்படும். ராஜேஷ்குமார்: தேங்காய்பட்டிணம் மீன்பிடிதுறைமுகத்தில் முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் தேங்குவதால் விபத்து ஏற்படுகிறது. அதை அகற்றுவதற்கு இயந்திரம் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: நான் நேராக சென்று ஆய்வு நடத்தினேன். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Tags : Congress ,Rajesh Kumar ,Assembly , How smart cards are classified: Question by Congress member Rajesh Kumar in the Assembly
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...