ஊட்டி : ஊட்டி அருகே காமராஜ் அணை கரையோரத்தில் கடமான்களை, செந்நாய்கள் வேட்டையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதன் அருகே காமராஜ் சாகர் அணை உள்ளது. இதனை ஒட்டியே எச்பிஎப் தொழிற்சாலை குடியிருப்புகள், சிட்கோ மற்றும் தலைகுந்தா பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு செந்நாய் கூட்டம் வலம் வந்துக் கொண்டிருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் தற்போது வலம் வரத்துவங்கியுள்ளன. இந்த செந்நாய் கூட்டம் தற்போது இப்பகுதியில் உள்ள வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாட துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த செந்நாய் கூட்டம் காமராஜ் சாகர் அணையின் கரையோரத்தில் தண்ணீர் குடித்த 3 கடாமான்களை விரட்டி, ஒரு கடாமானை வேட்டையாடியது. இதனை அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோக தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் வாழும் பகுதியில் செந்நாய் கூட்டம் வலம் வருவது தலைகுந்தா, எச்பிஎப் மற்றும் சிட்கோ பகுதியில் உள்ள மக்களை பீதியடைய செய்துள்ளது.