சென்னை : கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம் குறித்து ஆதாரமற்ற தகவல்களை கூற வேண்டாம் என அதிமுகவினரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, பென்னிகுயிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக மதுரை (மேற்கு) தொகுதி உறுப்பினர் திரு. செல்லூர் கே. ராஜு அவர்கள் பேசியதற்கு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு :
மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அமைச்சர் திரு. செல்லூர் ராஜு அவர்கள், பென்னிகுயிக் நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயரால் அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது, அப்பொழுதும் மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள்மூலமாக விளக்கம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் சொல்கிறேன்; நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரச்சாரத்தினைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அது சட்டமன்றத்திலும் பதிவாகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தினை நான் சொல்லியிருக்கிறேன். இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.
(உறுப்பினர் திரு. செல்லூர் கே. ராஜு அவர்கள், அதை இடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கருத்து தெரிவித்தபோது, குறுக்கிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில் அளித்தார்.)