சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆர்யா மீது, ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் விட்ஜா என்பவர் இந்திய தூதரகம் வாயிலாக ஒரு புகார் அளித்தார். அதில், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ரூ.70 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என தெரிவித்திருந்தார். இந்த புகார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், நடிகர் ஆர்யாவிற்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, விட்ஜாவிற்கு எந்த பகுதியில் இருந்து சாட்டிங் செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில், சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான், சமூகவலைத்தளத்தில் தன்னை நடிகர் ஆர்யாவாக அறிமுகப்படுத்திக்கொண்டு, விட்ஜாவிடம் பேசி சாட்டிங் செய்ததும், திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் பறித்ததும், இதற்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து,அவர்களை நேற்று கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் 2 செல்போன்கள், 1 லேப்டாப், 1 ஐபேட் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.