அறந்தாங்கி : அறந்தாங்கி பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அறந்தாங்கி பகுதியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் அறந்தாங்கி நகரம் மற்றும் காவிரி பாசன பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் வடகரை முருகன் கோவில் முதல் திரையரங்கம் வரை சாலை தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கியது. அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். சில வாகனங்கள் மழைநீரில் சிக்கி பழுதானது.தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறந்தாங்கி காவிரி பாசன பகுதி மற்றும் மானாவாரி பகுதிகளில் விவசாய பணிகள் சூடு பிடித்துள்ளன.