×

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செப். 14-ம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் நாடியிருந்தனர். அதிமுகவில் இருந்து நீக்கி அறிக்கை விட்டதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக புகழேந்தி வழக்கு தொடர்ந்தாா். அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க நேற்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது என்றும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Chennai Special Court ,OBS ,EPS , Pukahendi, Case: OBS, EPS, Petition, Discount
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...