×

உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்: திமுகவின் சாதனைகளை கூறி வாக்குகளை பெற வேண்டும்: கட்சியினருக்கு க.சுந்தர் எம்எல்ஏ அறிவுறுத்தல்

செய்யூர்: மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, திமுகவின் சாதனைகளை கூறி, மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் தொன்னாடு கிராமத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் தரன் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.

ஊராட்சி செயலாளர் வேலு முன்னிலை வகித்தார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறயுள்ளது. கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு திமுக சார்பில், போட்டியிடுபவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். திமுக ஆட்சியின் நூறுநாள் சாதனையான கொரோனா நிவாரண நிதி 4000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, நெல் விலை உயர்வு உள்பட அனைத்து சாதனைகளை கிராம பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். இதில், நிர்வாகிகள் தனியரசு, வெங்கடேசன் கிணார் அரசு, சசிகுமார், சிவக்குமார், பிரகாஷ், ராமகிருஷ்ணன் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சிலாவட்டம், முருகம்பாக்கம், சித்ரவாடி ஆகிய கிராமங்களில் நடந்தது.

Tags : DMK ,K. Sundar ,MLA , Local elections, DMK, consultation meeting
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம்...