சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், அவர் மீது மூன்று போக்சோ வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பதிவு செய்தனர்.
பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
சிவசங்கர் பாபா இதுவரை தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது சிவசங்கர் பாபா தான் ஆண்மையற்றவர் என்று கூறி ஜாமீன் கோரியது அம்பலமாகியுள்ளது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையில் ஆண்மை இல்லை என்பது தெரிய வந்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜாமீன் மனுவில் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ள சிவசங்கர் பாபா, ஆண்மையில்லை என்று கூறியிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.