புதுடெல்லி: வருமான வரித் துறையின் புதிய இணையதள செயல்பாட்டில் நிலவும் குறைகள் சரி செய்யப்பட்டதாக, இன்போசிஸ் இந்திய வர்த்தக பிரிவு வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறை, ரிட்டர்ன்தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு புதிய இணையதள வசதியை உருவாக்கியது. இந்த இணையதளத்தை உருவாக்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பு இன்போசிஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. புதிய இணையதளத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்வது சிரமமாக உள்ளதாகவும், இணையதளத்தினுள் நுழைவதே பிரச்சினையாக இருப்பதாகவும் புகார்கள் வந்தன. ஆனால், சிறு சிறு தொழில்நுட்ப பிரச்னைகள் தொடர்ந்தன.
கிட்டதிட்ட இரண்டரை மாதத்திற்கு மேலாகியும் இப்பிரச்னை தீர்க்கப்படாததால், இவ்விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, இன்போசிஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, இன்று சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்போசிஸ் (இந்தியாவின் வர்த்தக பிரிவு) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வருமான வரித்துறையின் இ-போர்ட்டல் பிரச்னை சரி செய்யப்பட்டது. வருமான வரித் துறை போர்ட்டலின் அவசர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தது. வரி செலுத்துபவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.