நெல்லை: ஆள் கடத்தல் வழக்கில் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுப்படி தாது மணல் நிறுவன அதிபர் வைகுண்டராஜன், பாளை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு சென்றார். நெல்லை மாவட்டம், திசையன்விளை, கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வி.வி. மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன். இவரது சகோதரரின் நிறுவனத்தில் பணி செய்த மாரிகண்ணன் என்பவரை கடத்தியதாக பாளை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து தினமும் பாளை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து பாளை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று விவி மினரல்ஸ் வைகுண்டராஜன், 2வது நாளாக கையெழுத்திட்டு சென்றார்.