×

இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் ஹெடிங்லியில் இந்திய அணி

லீட்ஸ்: இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணி வீரர்கள், ஹெடிங்லி மைதானத்தில் பயிற்சிக்காக முகாமிட்டுள்ளனர். இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இப்போட்டிக்காக, லீட்ஸ் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதற்காக நேற்று ஹெடிங்லி மைதானத்தில் முகாமிட்டனர். பிற்பகலில் இங்கிலாந்து வீரர்களும் வலைப்பயிற்சிக்காக வந்தனர்.

முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராடு, ஆலிவர் ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் காயம் அடைந்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. ஆல் ரவுண்டர்  பென் ஸ்டோக்ஸ் மனச்சோர்வு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடரில் 0-1 என பின்தங்கியிருக்கும் இங்கிலாந்து அணியில், டொமினிக் சிப்லி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார். 3வது டெஸ்டில் ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலான் 3வது வீரராக விளையாடும் வாய்ப்பு உள்ளது.


Tags : Indian team ,England , Indian team in the 3rd Test heading against England
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்