கோக்ரஜார்: அசாம் மாநிலம், கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ளது போடகான் கிராமம். இங்குள்ள அலகாபாத் வங்கியில் மூன்று மாதங்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது. மீண்டும் இதே வங்கியில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பதாக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, வங்கியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனை அறியாத கொள்ளையர்கள் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அவர்களை வழிமறித்த போலீசார் சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், கொள்ளைக் கும்பல் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதனால், போலீசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், கொள்ளையர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், துப்பாக்கிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கேஸ் கட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், தப்பிச் சென்ற மற்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.