புதுடெல்லி: வருமான வரி இ-தாக்கல் செய்வதற்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இணையதளத்தில் தொடர்ந்து கோளாறு ஏற்படுவது தொடர்பாக நேரில் வந்து விளக்கும் அளிக்கும்படி இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கலை எளிமையாக்க ஒன்றிய நிதியமைச்சகம் பல்வேறு நவீனமயங்களை புகுத்து வருகிறது. மக்கள் நேரடியாக அலுவலத்துக்கு வராமல், மின்னணு முறையில் தங்கள் வருமான வரி தாக்கலை பதிவு செய்வதற்கான புதிய இணையதளத்தை வருமான வரித்துறை 2 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள இணையதளமான ‘www.incometax.gov.in’, கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கப்பட்டது. இரண்டரை மாதங்கள் நிறைவடைந்தும், இந்த இணையதளத்தின் செயல்பாடுகளில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இது தொடர்பாக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இந்த சூழலில், கடந்த 2 நாட்களாக இந்த இணையதளம் முற்றிலுமாக முடங்கியது. இதனால், அனைத்து பணிகளுடம் தடைப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மால சீதாராமனிடம் நேரில் விளக்கம் அளிக்கும்படி இன்போசிஸ் நிர்வாக இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.