×

பெரம்பலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் 900 ஆண்டு பழமையான கல்செக்கு கண்டுபிடிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வெங்கலம் கிராமத்தில் சுமார் 900ஆண்டு பழமையான கல் செக்கு கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர் முனைவர் செல்வபாண்டியன்,சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ், வரலாற்று ஆர்வலர் வசந்தன் ஆகியோர் வெங்கலம் கிராமத்திற்கு வந்து செல்லியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செல்லியம்மன் கோயிலின் முன்புறம் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கல் செக்கினைக் கண்டறிந்தனர். தரையிலிருந்து கல்செக்கானது 33 செ.மீ உயரமுடையது. இதன் வெளிவிட்டம் 71செ.மீ. உள் விட்டம் 64 செ.மீ அளவுடையதாகவும் இருக்கிறது. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். செக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு வரிகளில் மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் லம்பலம்”எனும் கல்வெட்டானது அமைந்துள்ளது.எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 11- ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.அதாவது இந்த கல்செக்கு சுமார் 900ஆண்டுப் பழமையானதாகும்.

பிறகு ஆய்வின் முடிவில் வரலாற்று ஆய்வாளர்.செல்வபாண்டியன் தெரிவித்ததாவது : வெங்கலம் சிவன் கோயிலில் உள்ள கி.பி.13 ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டின் வழியாக,இவ்வூரின் பெயர் வெண்குளம் என்பதும் ,இவ்வூர் சோழர் காலத்தில் வணிக நகராக விளங்கியது என்பதும் தெரிய வருகிறது. பழங்காலம் முதல் உணவுப் பொருளாகவும்,மருந்துப் பொருளாகவும்,கோயில்,வீடுகள், தெருக்கள் ஆகியவற்றில் விளக்கு எரித்தல் முதலிய பயன்பாடுகளுக்காகவும் பலவிதமான எண்ணெய் வகைகள் பயன்பட்டு வந்தன. எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்க செக்குகள் பயன்பட்டன.

இதற்கென அரசர்கள்,படைத்தலைவர்கள்,செல்வர்கள் ஆகியோர் கோயில் வழிபாட்டுக்கும் ,பொதுப் பயன்பாட்டுக்கும் கல்செக்குகளைச் செய்து தானமாக வழங்கினர்.இதனைத் தமிழகம் முழுதும் கண்டறியப்பட்டு வரும் கல்செக்குகளால் அறிய வருகிறோம். பெரம்பலூர் மாவட்டத்தில் பாளையம், செஞ்சேரி, சத்திரமனை, வேலூர் ஆகியக் கிராமங்களில் இத்தகைய கல்செக்குகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.இதில் மற்ற ஊர்களில் உள்ள கல்செக்குகளில் 18 மற்றும் 20 ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்பட்டாலும் ,வெங்கலத்தில் உள்ள இந்த கல்வெட்டுதான் 11- ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பழமையானதாகும். மல்லடி நாட்டான் என்பவரே இந்த கல்செக்கினைச் செய்து கொடுத்திருக்கிறார்.இவர் யாரென அறியக்கூடவில்லை.பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும்.இது தற்போதைய செல்லியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியாகலாம்.தற்போதும் இந்த கல்செக்கு பயன்பாட்டில் உள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றைப் பறைசாற்றும் இந்த அரிய வரலாற்று சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags : Venkalam village ,Perambalur , Perambalur, bronze, 900 years, stone
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி