×

நாமக்கல் அருகே வீடு, பணம் கேட்டு வயதான தாயை நடுரோட்டில் அடித்து-உதைத்த கொடூர மகன் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த பொன்னேரிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி நல்லம்மாள்(65), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். சின்னசாமி கடந்த ஆண்டு இறந்து விட்டார். அவர் உயிரோடு இருந்த போது, சண்முகத்திற்கு 4.5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளார். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டதால், தனியாக வசிக்கும் நல்லம்மாள், 100 நாள் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் கூலியில் பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் தனது நகைகளை விற்று ரூ.3 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில், நல்லம்மாள் வைத்துள்ள பணம் மற்றும் அவர் வசிக்கும் வீட்டை, தனக்கு எழுதித் தரவேண்டும் என்று கேட்டு, சண்முகம் அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மதியம் நல்லம்மாள் வீட்டுக்கு சென்ற சண்முகம், அவரது மனைவி ஜானகி ஆகியோர், பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்துள்ளனர். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த சண்முகம், பெற்ற தாய் என்றும் பாராமல், அவரை சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும், அவரது சேலையை பிடித்து நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றார். இதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.

 படுகாயமடைந்த நல்லம்மாளை, அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, நல்லம்மாளை அவரது மகன் நரோட்டில் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. இதையடுத்து பரமத்தி போலீசார், சண்முகத்தை நேற்று மாலை கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவி ஜானகியை தேடி வருகின்றனர்.


Tags : Namakkal , Namakkal, house, money, beaten-up brutal son, arrested
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...