நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்து விட்டு, 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போய்விட்டது. பதிவேட்டுக்கும், இருப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது என கூறியுள்ளார். வடசென்னை உள்ளிட்ட 3 அனல் மின்நிலையத்திலும் கடந்த காலங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து கொண்டே வந்தது. இது பற்றி நான் டெல்லி சென்று, மத்திய அமைச்சரை சந்தித்து பேசி விட்டு வந்தேன்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவேட்டில் உள்ள நிலக்கரி இருப்புக்கும், கையிருப்புக்கும் வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தோம். இது பற்றி விசாரிக்க ஸ்ரீதர் என்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தோம். ஏற்கனவே நாங்கள் எடுத்த கணக்கைத்தான், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். எனக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. நிலக்கரி காணாமல் போனதற்கு யார் காரணம் என அமைச்சர் முழுமையாக விசாரிக்கட்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.