×

அதிகரிக்கும் கொரோனா தொற்று!: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இருந்து பல நாடுகள் விலகல்..!!

டோக்கியோ: டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து பல நாடுகள் விலகி வருகின்றன. சமோவா, கிரிபாதி, வனுவாட்டு மற்றும் டோங்கா ஆகிய 4 நாட்கள் நிதி பற்றாக்குறை மற்றும் கொரோனா காலத்தில் பயணம் செய்வதில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டி பாராலிம்பிக்ஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளன. இந்த தகவலை சர்வதேச பாராலிம்பிக்ஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கிரேக் ஸ்பென்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அரசியல் சிறத்தன்மையற்ற சூழல் நிலவுவதால் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே போட்டியில் இருந்து விலகிவிட்டது.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய கிரேக் ஸ்பென்ஸ், ஓசினியா, பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய நாடுகள்  பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகள் வழியாக அவர்கள் டோக்கியோ வரவேண்டிய சூழல் நிலவுகிறது. குவாரன்டைன் உள்ளிட்ட பிற விஷயங்களும் அவர்களுக்கு சாதகமாக இல்லை. நான்கு வாரங்கள் ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்ப நிதி வசதி இல்லாததும், அவர்கள் போட்டியில் இருந்து விலக காரணம் என்று குறிப்பிட்டார்.

பாராலிம்பிக்ஸ் நடக்கவுள்ள டோக்கியோவில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள வீரர் உட்பட பாராலிம்பிக்ஸில் தொடர்புடைய 15 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ம் தேதியில் இருந்து பார்வையாளர்கள் இன்றி பாராலிம்பிக்ஸ் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tokyo ,Paralympics , Corona, Tokyo Paralympics, many countries, deviation
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்