சிதம்பரம்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, சிதம்பரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின் கே.எஸ் அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி. தொகையில் மாநிலங்களின் பங்கை மாநில அரசுகளுக்கு தருவதாக மத்திய அரசு ஒத்துக்கொண்டது. தமிழகத்துக்கு அந்த தொகையை கூட தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. மாநில அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக பெட்ரோலுக்கான கலால் வரியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ரூபாய் குறைத்து இருக்கிறார்.
7 ஆண்டுகளில் வலிமைமிக்க பிரதமர் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்கிற மோடியால் கூட இதை செய்ய முடியவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாளில் ஸ்டாலின் இதைச் செய்திருக்கிறார். அதுபோல் ஒவ்வொன்றையும் படிப்படியாக அவர் செய்வார். ஒரு அரசு பொய் வழக்கு என்றெல்லாம் எதையும் போட முடியாது. விசாரணை என்று வந்தால் அதை எதிர்கொண்டு அதில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதுதான் இந்திய வழக்காடு மன்றத்தின் தன்மை. கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அதை பின்பற்றுவார் என நம்புகிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.