புதுடெல்லி: ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு பட்டியலில் புதிய பிரிவுகளை சேர்ப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இம்மாநில அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) பட்டியலை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை,’ என்று கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் ஆஜரான ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு இந்த அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டியது. இருப்பினும், மராத்தா பிரிவு மக்்களுக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே முடிவு செய்வதற்கான அதிகாரத்தை அளிக்கும் 127வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை, சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் அரசிதழிலும் இச்சட்டம் வெளியிடப்பட்டது.